Featuredஆய்வுக் கட்டுரைகள்காலநிலை மாற்றம்

பேரிடர் கால இடப்பெயர்வு: தங்குமிடக் குறைபாடுகளும் பெண்களின் பாதுகாப்பும்

அருள்கார்க்கி | கொள்கை ஆய்வாளர் | Infograph | nenarrative

அறிமுகம்
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டிட்வா’ (Cyclone Ditwah) புயல், 2025 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நாட்டின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இந்த அனர்த்தம் தோற்றுவித்த கடும் மழைவீழ்ச்சி, முன்னெப்பொழுதும் இல்லாத அளவிலான நிலச்சரிவுகளையும் வெள்ளப்பெருக்கையும் உருவாக்கியது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் 2026 பெப்ரவரி மாதத்திற்கான அறிக்கை (World Food Programme – WFP Sri Lanka Country Brief, February 2026), இந்த அனர்த்தத்தினால் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றது. அத்துடன், அடிப்படைச் சேவைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சீர்குலைந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளை நிவர்த்தி செய்ய ஐக்கிய நாடுகள் சபை ‘மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை’ (Humanitarian Priorities Plan) ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையும் இவ்வறிக்கை உறுதிப்படுத்துகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் (Disaster Management Centre – DMC) 2026 மார்ச் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட  அறிக்கை’ (Situation Summary Report), பதுளை மாவட்டம் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றது. அதன் தரவுகளின்படி, இம்மாவட்டத்தில் மட்டும் 26,393 குடும்பங்களைச் சேர்ந்த 90,127 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 90 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும், பதுளையில் 549 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு, 5511 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டடங்களில் தற்காலிகமாக நிறுவப்பட்ட ‘பாதுகாப்பு மையங்களில்’ (Safety Centres) தங்கவைக்கப்பட்டுள்ளனர். எனினும், சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) International Organization for Migration – Protection Needs and Concerns, Jan-Feb 2026 குறித்த அறிக்கையின்படி, இத்தற்காலிகத் தங்குமிடங்களின் உட்கட்டமைப்பு வடிவமைப்பானது பாலின உணர்திறன் (Gender Sensitivity) அற்றதாகக் காணப்படுகின்றது. இது சர்வதேச மனிதாபிமான தரநிலைகளான ‘ஸ்பியர் (Sphere) தரநிலைகள்’ மற்றும் ‘பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்தல்’ (GBV Prevention) போன்ற வழிகாட்டல்களுடன் ஒப்பிடுகையில் பாரிய இடைவெளியைக் கொண்டுள்ளது.
இக்கட்டுரையானது, இத்தகைய கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் எவ்வாறு இடம்பெயர்ந்த பெண்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன என்பதையும், முகாம்களில் நிலவும் அசௌகரியங்கள் அவர்களை மீண்டும் அபாயகரமான வலயங்களுக்கு முன்கூட்டியே திரும்பத் தூண்டும் காரணியாக (Push Factor) அமைவதையும் ஆழமாக ஆராய முனைகின்றது.
பாதுகாப்பு மையங்களின் உட்கட்டமைப்புச் சவால்கள் மற்றும் பாதுகாப்பு இடர்கள்
 
அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு மையங்களின் (Safety Centres) பௌதிகக் கட்டமைப்பு, அவர்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உறுதிப்படுத்துவதில் தீர்மானமிக்க காரணியாக அமைகின்றது. எனினும், இலங்கையின் ‘டிட்வா’ (Ditwah) அனர்த்தத்தின் போது அமைக்கப்பட்ட முகாம்கள் பல அடிப்படை உட்கட்டமைப்பு சவால்களைக் கொண்டிருந்தன.International Organization for Migration (IOM) அமைப்பினால் வெளியிடப்பட்ட Protection Needs and Concerns (Jan-Feb 2026) அறிக்கையின்படி, ஆய்வு செய்யப்பட்ட ஆறு மாவட்டங்களிலும் (பதுளை, கண்டி, கேகாலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் நுவரெலியா) பாதுகாப்பு மையங்களில் நிலவும் ‘தனியுரிமை இன்மை’ (Lack of Privacy) ஒரு முதன்மையான பாதுகாப்புப் பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. பெரும்பாலான பாதுகாப்பு மையங்கள் பாடசாலை வகுப்பறைகளாகவோ அல்லது பொது மண்டபங்களாகவோ காணப்படுவதால், அங்கு குடும்பங்களுக்கிடையே போதிய இடைவெளிகளோ அல்லது மறைப்புகளோ (Partitions) இருக்கவில்லை. இத்தகைய திறந்தவெளித் தங்குமிடச் சூழல், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளிடையே ஒருவித ‘அசௌகரியமான’ (Uncomfortable) உணர்வை உருவாக்கியுள்ளது. இது பொதுவான பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை அதிகரிப்பதோடு, பெண்களின் மிக அந்தரங்கமான அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் பாரிய இடர்களைத் தோற்றுவிக்கின்றது.

முகாம்களின் உட்கட்டமைப்புச் சீர்கேடுகள், இடம்பெயர்ந்த மக்களைத் தமது பாதுகாப்பு மையங்களை விட்டு முன்கூட்டியே வெளியேறத் தூண்டும் ஒரு ‘தள்ளும் காரணியாக’ (Push Factor) அமைகின்றது என்பதை IOM – Protection Needs and Concerns (Jan-Feb 2026) அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. முகாம்களில் நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகளினால், வீடுகள் பகுதியளவு சேதமடைந்த நிலையிலும் அல்லது நிலச்சரிவு அபாயம் நீங்காத நிலையிலும் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றனர். இத்தகைய ‘காலம் முந்திய திரும்புதல்’ (Premature return) மக்களை மீண்டும் அனர்த்தப் பாதிப்புகளுக்கு உள்ளாக்குவதுடன், அவர்களின் முழுமையான மீட்சியைத் தாமதப்படுத்துகின்றது. Disaster Management Centre (DMC) – Situation Summary Report (16th March 2026) தரவுகளின்படி, பதுளை மாவட்டத்தில் மட்டும் 5,880 குடும்பங்களைச் சேர்ந்த 21,473 நபர்கள் முகாம்களில் தங்குவதைத் தவிர்த்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைவதில் முறையான பொறிமுறை இல்லாதது மற்றுமொரு இடராகும்.    

 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் (Accountability to Affected Populations – AAP) மிகவும் அவசியமானதாகும்.   முகாம்களில் ‘பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல்’ (Prevention of Sexual Exploitation and Abuse – PSEA) தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போதிய வெளிச்சமின்மை மற்றும் பாதுகாப்பற்ற கழிவறைகள் போன்ற கட்டமைப்புப் பலவீனங்கள், பாலியல் ரீதியான வன்முறைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதால், இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்பதை இவ்வறிக்கை வலியுறுத்துகின்றது.DMC – Situation Summary Report (16th March 2026) தரவுகளின்படி, பதுளை மாவட்டத்தில் 15 பாதுகாப்பு மையங்கள் தற்போதும் இயங்கி வருகின்றனபாடசாலைகளை நீண்டகாலமாக முகாம்களாகப் பயன்படுத்துவது மாணவர்களின் கற்றல் சூழலில் நேரடி இடர்களைத் தோற்றுவிக்கின்றது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலங்கள் ‘உயர் அபாய வலயங்களாக’ வகைப்படுத்தப்பட்டுள்ளதால், மாற்று நிலங்களை அடையாளம் காண்பதில் நிலவும் தாமதம் முகாம்களை மூடுவதில் பாரிய தடையாக உள்ளது. 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படும் காலங்களில் இம்முகாம்களின் நிலைமை மேலும் மோசமடைவதற்கான இடர்கள் அதிகம்.
பெண்களின் பாதுகாப்பு இடர்கள்: ஒரு பாலினப் பார்வை  
 
அனர்த்தங்கள் பால்நிலை அடிப்படையில் நடுநிலையானவை அல்ல; அவை சமூகத்தில் ஏற்கனவே நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்து பெண்கள் மற்றும் ஆண்கள் மீது வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. டிட்வா (Ditwah) அனர்த்தத்தின் பின்னர் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விவகாரங்கள் ஒரு சிக்கலான ‘பாலின இடர் பாதையை’ (Gendered Risk Pathways) உருவாக்கியுள்ளன. International Organization for Migration (IOM) அமைப்பின் Protection Needs and Concerns (Jan-Feb 2026) அறிக்கை சுட்டிக்காட்டுவது போல, பாதுகாப்பு மையங்களின் உட்கட்டமைப்பு வடிவமைப்பானது பெண்களின் பிரத்தியேகத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளமை, அவர்களைப் பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக, முகாம்களில் நிலவும் நெரிசலான சூழல் மற்றும் போதிய வெளிச்சமின்மை ஆகியவை பெண்களிடையே பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை அதிகரிப்பதோடு, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (GBV) நிகழ்வதற்கான இடர்களைத் தோற்றுவிக்கின்றன.
முகாம்களில் நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் வெறும் வசதிக்குறைபாடுகள் மட்டுமல்ல, அவை பெண்களை ஆபத்தான தீர்மானங்களை எடுக்கத் தூண்டும் ஒரு ‘தள்ளும் காரணியாக’ (Push Factor) மாறுகின்றன என்பதைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. IOM – Protection Needs and Concerns (Jan-Feb 2026) அறிக்கையின்படி, பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பெண்கள், அங்குள்ள பொதுவான குளியலறைகள் மற்றும் கழிவறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகத் தமது உணவு மற்றும் நீர் உட்கொள்ளலைக் குறைத்துக் கொள்கின்றனர். இத்தகைய நடத்தை மாற்றங்கள் அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தில் பாரிய இடர்களைத் தோற்றுவிப்பதுடன், கௌரவமான வாழ்வாதாரத்திற்கான உரிமையையும் கேள்விக்குட்படுத்துகின்றன. மேலும் Privacy  இல்லாமையினால் ஏற்படும் இத்தகைய அசௌகரியங்கள், பெண்கள் தமது பாதுகாப்பை விடக் கண்ணியத்திற்கு முக்கியத்துவம் அளித்து, நிலச்சரிவு அபாயம் இன்னும் நீங்காத தமது பழைய வீடுகளுக்கே முன்கூட்டியே திரும்பும் நிலையை (Premature Return) உருவாக்குகின்றன. இது ஒரு ‘சுழற்சி முறை இடர்’ (Cyclical Risk) ஆகும்; அதாவது, முகாம்களில் நிலவும் பாதுகாப்பின்மை, பெண்களை மற்றொரு இயற்கை அனர்த்த அபாயத்திற்குள் தள்ளுகின்றது.
மறுபுறம், அனர்த்த மீட்புப் பணிகளில் பெண்களின் பொறுப்புக்கூறல் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியமாகின்றது. WFP Sri Lanka Country Brief (February 2026) அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ‘பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல்’ (Prevention of Sexual Exploitation and Abuse – PSEA) தொடர்பான பொறிமுறைகளை வலுப்படுத்துவது ஒரு கட்டாயத் தேவையாக மாறியுள்ளது. பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் மனிதாபிமான உதவிகளைப் பெறும்போது எவ்வித சுரண்டல்களுக்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். மேலும், Disaster Management Centre (DMC) – Situation Summary Report (16th March 2026) தரவுகளின்படி, பதுளை போன்ற மாவட்டங்களில் பெருமளவிலான பெண்கள் தமது குடும்பங்களுடன் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். இத்தகைய ‘மறைக்கப்பட்ட இடம்பெயர்ந்த’ பெண்கள் உத்தியோகபூர்வ உதவிகளிலிருந்து விடுபடுவதால், அவர்கள் பொருளாதார ரீதியாகப் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இது அவர்கள் மீதான சுரண்டல் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கான இடர்களை மேலும் அதிகரிக்கின்றது.

சமூக – பொருளாதார தாக்கம்: மலையகப் பெண்களின் நிலை

மலையகப் பெண்களின் சமூக – பொருளாதார நிலைத்தன்மை என்பது பெருந்தோட்டத் துறையின் நேரடி வருமானத்திலேயே தங்கியுள்ளது. World Food Programme (WFP) – Sri Lanka Country Brief (February 2026) அறிக்கையின்படி, அனர்த்தத்தின் விளைவாக தேயிலை மற்றும் இறப்பர் மலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளும், தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வேலை நாட்களைக் குறைத்துள்ளன. குறிப்பாக, குடும்பப் பொருளாதாரத்தை வழிநடத்தும் மலையகப் பெண்கள், வேலை நாட்களின் இழப்பினால் தமது மாதாந்த வருமானத்தை முழுமையாக இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய வருமான இழப்பானது, ஏற்கனவே வறுமைக் கோட்டின் கீழ் உள்ள இச் சமூகத்தில் உணவுப் பாதுகாப்பின்மையை (Food Insecurity) மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. WFP இன் தரவுகளின்படி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டக் குடும்பங்கள் போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்வதுடன், தமது வருமானத்தில் பெரும் பகுதியை உணவுக்காகவே செலவிட வேண்டிய இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், இந்தப் பொருளாதாரச் சரிவு பெண்களை ஒரு நீண்டகால ‘கடன் பொறிக்குள்’ (Debt Trap) தள்ளும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. Disaster Management Centre (DMC) – Situation Summary Report (16th March 2026) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, பதுளை மாவட்டத்தில் மட்டும் 5,511 வீடுகள் சேதமடைந்துள்ளன. தமது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் வீடுகளை அமைப்பதிலேயே முதலீடு செய்துள்ள மலையகப் பெண்கள், தற்போது அவ்வீடுகளை இழந்த நிலையில் மீண்டும் அவற்றைக் கட்டியெழுப்ப முறையான நிதி வசதிகள் இன்றி நுண்நிதி (Microfinance) நிறுவனங்களின் அதீத வட்டி விகிதக் கடன்களை நாட வேண்டிய இடர்களுக்கு உள்ளாகின்றனர். இது அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பறிப்பதுடன், மீண்டெழுவதற்கான வாய்ப்புகளையும் (Resilience) மட்டுப்படுத்துகின்றது.
சர்வதேச தரநிலைகளுடன் ஒரு ஒப்பீடு
இலங்கையில் டிட்வா (Ditwah) அனர்த்தத்தின் போது பாடசாலைகளைப் பாதுகாப்பு மையங்களாகப் பயன்படுத்தியமையானது, சர்வதேச மனிதாபிமான தரநிலைகளுடன் ஒப்பிடுகையில் பல கட்டமைப்பு ரீதியான முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அனர்த்தங்களுக்குப் பின்னரான மீட்சி மற்றும் கல்வித் தொடர்ச்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் இது பாரிய சவால்களை உருவாக்கியுள்ளது.ஜப்பானிய மொழியில் ‘கக்கோ-சைக்காய்’ என்பது “பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்தல்” என்ற கருப்பொருளைக் கொண்ட

து. ஜப்பானின் அனர்த்த முகாமைத்துவக் கொள்கையின்படி, ஒரு அனர்த்தம் நிகழ்ந்த 72 மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகள் மீண்டும் இயங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
இலங்கையில், Disaster Management Centre (DMC) – Situation Summary Report (16th March 2026) தரவுகளின்படி, பதுளை மாவட்டத்தில் 15 பாதுகாப்பு மையங்கள் இன்னும் பாடசாலைகளிலேயே இயங்கி வருகின்றன. அனர்த்தம் நிகழ்ந்து பல வாரங்கள் கடந்தும் பாடசாலைகள் முகாம்களாகப் பயன்படுத்தப்படுவது, ஜப்பானிய ‘கல்வித் தொடர்ச்சித் திட்டமிடல்’ (Education Continuity Planning – ECP) கோட்பாட்டிற்கு முற்றிலும் முரணானது. International Organization for Migration (IOM) – Protection Needs and Concerns (Jan-Feb 2026) அறிக்கை சுட்டிக்காட்டுவது போல, பாடசாலைகளை நீண்டகாலம் முகாம்களாகப் பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் சூழல் சிதைக்கப்படுவதுடன், அது அவர்களின் உளவியல் ரீதியான மீட்சியையும் (Psychosocial Recovery) தாமதப்படுத்துகின்றது.
நெதர்லாந்து போன்ற நாடுகள் வெள்ள அபாயங்களைக் கையாள ‘Room for the River’ என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துகின்றன. இதன்படி, அனர்த்தக் காலங்களில் மக்களைத் தற்காலிகமாகத் தங்கவைக்கப் பாடசாலைகளை நாடுவதற்குப் பதிலாக, ‘பல்பயன் கட்டிடங்களை’ (Purpose-built Multipurpose Centres) அவர்கள் நிர்மாணித்துள்ளனர். இக்கட்டிடங்கள் அனர்த்தமற்ற காலங்களில் சமூகக் கூடங்களாகவும், அனர்த்தக் காலங்களில் பாலின உணர்திறன் கொண்ட (Gender-sensitive design) பாதுகாப்பு மையங்களாகவும் மாற்றமடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இத்தகைய பிரத்தியேகக் கட்டமைப்பு வசதிகள் இன்மையால், இடம்பெயர்ந்த மக்கள் பொது மண்டபங்களில் நெரிசலாகத் தங்க வேண்டியுள்ளது. இது IOM அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்ட மறைவுரிமை (Privacy) தொடர்பான இடர்களைத் தீவிரப்படுத்துகின்றது.

சர்வதேச மனிதாபிமான சாசனத்தின் ‘ஸ்பியர் தரநிலைகள்’ (Sphere Standards), இடம்பெயர்ந்த ஒரு நபருக்குத் தேவையான குறைந்தபட்ச இடவசதி, சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு என்பவற்றை வரையறுக்கின்றன. WFP Sri Lanka Country Brief (February 2026) அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல்’ (Protection and Accountability) கொள்கையின்படி, கழிவறைகள் மற்றும் குளியலறைகள் பாலின அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும். ஆனால், இலங்கையின் பாடசாலை முகாம்களில் இத்தகைய உட்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்யவில்லை. அனர்த்த முகாமைத்துவத்தில் ‘Building Back Better’ (மீளக் கட்டியெழுப்பும்போது இன்னும் சிறப்பாகச் செய்தல்) என்ற கோட்பாடு நிலவுகிறது. எனினும், ஒவ்வொரு அனர்த்தத்தின் போதும் மீண்டும் மீண்டும் பாடசாலைகளையே தஞ்சமடையும் இடங்களாகப் பயன்படுத்துவது, நீண்டகாலத் தீர்வுகளை நோக்கிய நகர்வில் உள்ள தேக்க நிலையைக் காட்டுகின்றது. சர்வதேச அனர்த்தக் குறைப்பு மூலோபாயத்தின் (UNDRR) பரிந்துரைப்படி, அனர்த்த வலயங்களுக்கு அருகில் பாடசாலைகளைத் தற்காலிக முகாம்களாக மாற்றுவதைக் கைவிட்டு, பின்வரும் வசதிகளைக் கொண்ட ‘பல்பயன் மையங்களை’ உருவாக்குவது அவசியமாகும்:

  1. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேகப் பிரிவுகள்.
  2. பாதுகாப்பான மற்றும் போதுமான வெளிச்சம் கொண்ட சுகாதார வசதிகள்.
  3. சமூக சமையலறைகள் மற்றும் வாழ்வாதாரப் பயிற்சி அறைகள்.

இலங்கையின் தற்போதைய அணுகுமுறை அனர்த்த கால அவசரத் தேவைகளை (Emergency Response) மட்டுமே பூர்த்தி செய்கிறதே தவிர, அது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘கௌரவமான இடம்பெயர்வு’ (Displaced with Dignity) என்ற கோட்பாட்டை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. ஜப்பான் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் மாதிரிகளைப் பின்பற்றி, கொள்கை ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதே எதிர்கால இடர்களைக் குறைப்பதற்கான வழியாகும்.

கொள்கைப் பரிந்துரைகள்

டிட்வா (Ditwah) அனர்த்தத்திற்குப் பின்னரான தற்போதைய களநிலைவரங்களை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகளில் உள்ளடக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பரிந்துரைகள் பின்வருமாறு அமைகின்றன:

முதலாவதாக, அனர்த்தத் தயார்நிலைத் திட்டங்களில் ‘பாலின உணர்திறன் கொண்ட கட்டடக்கலை’ (Gender-Sensitive Architecture) என்பது ஒரு விருப்பத் தெரிவாக அன்றி, கட்டாயமான ஒரு தரநிலையாக மாற்றப்பட வேண்டும். International Organization for Migration (IOM) – Protection Needs and Concerns (Jan-Feb 2026) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, முகாம்களில் நிலவும் தனிப்பட்ட மறைவுரிமை (Privacy) இல்லாமையே பெண்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான பிரதான காரணியாகும். எனவே, எதிர்காலத்தில் அமைக்கப்படும் பாதுகாப்பு மையங்கள் அல்லது பல்பயன் கட்டிடங்களில் பெண்களுக்கான தனிப்பிரிவுகள் (Partitioning), போதிய வெளிச்சம் கொண்ட உட்புறப்பாதைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் பிரிக்கப்பட்ட சுகாதார வசதிகள் என்பன சர்வதேச ‘ஸ்பியர் (Sphere)’ தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். இது பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் மீதான வன்முறை இடர்களைக் குறைப்பதோடு, இடம்பெயர்ந்த சூழலிலும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வழிவகுக்கும்.

இரண்டாவதாக, அனர்த்தங்களுக்குப் பின்னரான மீள்குடியேற்றச் செயற்பாடுகளில் நிலவும் தொழில்நுட்பத் தாமதங்களைக் களைவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, National Building Research Organisation (NBRO) அமைப்பின் தொழில்நுட்ப அறிக்கைகளுக்காக மக்கள் நீண்டகாலம் காத்திருக்கும் சூழலில், அவர்களைத் தொடர்ந்து தற்காலிக முகாம்களிலேயே வைத்திருப்பது அவர்களின் சமூக-பொருளாதார நிலையை மேலும் சீர்குலைக்கும். இதற்கு மாற்றீடாக, நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரையிலான இடைக்காலப் பகுதியில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் கௌரவமான ‘வாடகை வீட்டு வசதித் திட்டங்களை’ (Rental Support Schemes) அரசும் மனிதாபிமான அமைப்புகளும் இணைந்து வழங்க வேண்டும். இது பாடசாலைகள் நீண்டகாலம் முகாம்களாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதுடன், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கும் தடையின்றி அமைய உதவும்.

மூன்றாவதாக, பாதுகாப்பு மையங்களின் உள்ளகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சமூக அடிப்படையிலான கண்காணிப்புப் பொறிமுறைகள்’ (Community-based Monitoring) உருவாக்கப்பட வேண்டும். முகாம்களுக்குள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வெறும் உத்தியோகபூர்வ பாதுகாப்புத் தரப்பினரை மட்டும் நம்பியிருக்காமல், சிவில் அமைப்புகள் மற்றும் உள்ளூர் பெண்கள் அமைப்புகளை உள்வாங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். WFP Sri Lanka Country Brief (February 2026) அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள ‘பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல்’ (Accountability to Affected Populations) கொள்கையின்படி, இக்குழுக்கள் முகாம்களில் நிலவும் முறைப்பாடுகளை உடனுக்குடன் பெற்றுத் தீர்வுகளை வழங்க முனைய வேண்டும். இது குறிப்பாகப் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான (PSEA) ஒரு வலுவான களப்பொறிமுறையாக அமையும்.

இறுதியாக, பாதிக்கப்பட்ட பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் வாழ்வாதார மீட்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். World Food Programme (WFP) முன்னெடுக்கும் பணவுதவித் திட்டங்களை , குடும்பத் தலைவிகளாகச் செயற்படும் பெண்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். இத்தகைய நிதி உதவிகள், மலையகப் பெண்கள் நுண்நிதி நிறுவனங்களின் கடன் பொறிக்குள் சிக்குவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக அமையும். அத்துடன், அனர்த்தங்களினால் சிதைந்த பெருந்தோட்ட வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்ப, பெண்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் விவசாய பொருட்களை வழங்குவதன் மூலம், அவர்களின் மீண்டெழும் திறனை (Resilience) அதிகரித்து, எதிர்கால பொருளாதார இடர்களைச் சமாளிக்க அவர்களைத் தயார்படுத்த முடியும்.
 
முடிவுரை  

இலங்கையில் ‘டிட்வா’ (Ditwah) அனர்த்தத்திற்குப் பின்னரான தற்போதைய களச்சூழல், அனர்த்த முகாமைத்துவம் என்பது வெறும் தொழில்நுட்ப ரீதியான முன்கூட்டிய எச்சரிக்கைகளுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை என்பதைத் துல்லியமாக உணர்த்தியுள்ளது. இக்கட்டுரையில் ஆராயப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அனர்த்த முகாமைத்துவத்தில் ‘கட்டமைப்புச் சிதைவு’ (Structural Failure) என்பது வெறும் கட்டிடங்களின் உடைவு அல்லது நிலச்சரிவு சார்ந்தது மட்டுமல்ல; அது இடம்பெயர்ந்த மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலில் (Social Protection Safety Net) ஏற்பட்டுள்ள பாரிய ஓட்டைகளையும் உள்ளடக்கியதாகும்.

பாதுகாப்பு மையங்களில் நிலவும் உட்கட்டமைப்பு குறைபாடுகள், குறிப்பாகப் பெண்களின் தனிப்பட்ட மறைவுரிமையை (Privacy) உறுதிப்படுத்தத் தவறியமை, அவர்களை மீண்டும் அனர்த்த அபாயம் நிலவும் இடங்களுக்கே தள்ளும் ஒரு மறைமுகக் கருவியாக (Push Factor) மாறியுள்ளது. இது ஒரு ஆபத்தான போக்காகும். பாதுகாப்பு மையங்கள் என்பது மக்களைப் பாதுகாக்கும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் கண்ணியத்தை இழக்கச் செய்து அவர்களை மீண்டும் அபாயத்திற்குள் தள்ளும் இடங்களாக இருக்கக்கூடாது. International Organization for Migration (IOM) – Protection Needs and Concerns (Jan-Feb 2026) மற்றும் WFP Sri Lanka Country Brief (February 2026) ஆகிய அறிக்கைகள் சுட்டிக்காட்டுவது போல, உட்கட்டமைப்பு ரீதியான பலவீனங்கள் சமூகப் பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கி, பெண்களைப் பாலின ரீதியான வன்முறை இடர்களுக்குள் (Gendered Risks) ஆக்குகின்றன.

இலங்கை போன்ற வளரும் நாடுகளில், ஜப்பானின் ‘கக்கோ-சைக்காய்’ போன்ற கல்வித் தொடர்ச்சி மாதிரிகளையும், நெதர்லாந்தின் பல்பயன் கட்டிடக் கோட்பாடுகளையும் உள்வாங்குவது காலத்தின் தேவையாகும். பாடசாலைகளைத் தற்காலிக முகாம்களாகப் பயன்படுத்துவதை நிறுத்தி, பாலின உணர்திறன் கொண்ட நிலையான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே மனிதாபிமான உதவிகளின் தரத்தை உயர்த்த முடியும். அனர்த்த முகாமைத்துவக் கொள்கைகள் என்பது வெறும் ‘நிவாரணம்’ வழங்குவதைத் தாண்டி, பாதிக்கப்பட்ட சமூகங்களின், குறிப்பாகப் பெண்களின் கௌரவம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை நிலைநிறுத்தும் வகையில் அமைய வேண்டும்.

முடிவாக, சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றி, பாலினச் சமத்துவத்தைப் பேணும் வகையிலான ஒரு விரிவான அனர்த்த முகாமைத்துவக் கொள்கையே நிலையான மீட்சிக்கு (Sustainable Recovery) வழிவகுக்கும். டிட்வா அனர்த்தத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, எதிர்கால அனர்த்தத் தயார்நிலைத் திட்டங்களில் ‘சமூகக் கட்டமைப்பு’ மற்றும் ‘பாலினப் பாதுகாப்பு’ ஆகியவற்றை அச்சாணியாகக் கொண்ட ஒரு புதிய அணுகுமுறையை நோக்கி இலங்கை நகர வேண்டியது அவசியமாகும். அத்தகையதொரு மாற்றமே, அனர்த்தங்களின் போது ஏற்படும் மனித இடர்களைக் குறைத்து, ஒரு நெகிழ்ச்சியான (Resilient) சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button